#புதியகண்ணன்பாட்டு
கண்ணன் என் தோழன்
கண்ணனை நாடிச் செல்கை
சோவெனக் கொட்டிடும் பேய்மழை - பசிச்
சோர்வில் இருளும் விழிகளால் - தனித்
தீவென ரெண்டு மரத்தினில் அன்று
தேடி அடைந்தனம் தஞ்சமே! பழி
நாவென தன்று நடத்திய - துளி
நாணமிலா தந்தச் செய்கையாம் - பெரு
மாவலில் நண்பனின் பங்கெனக் கொண்ட
அவலும் புசித்திளைப் பாறினேன்! (1)
ஏனெனக் கேட்கவு மில்லையால்! அவன்
ஏதும் மொழிந்திட வில்லையால்! எனை
நானென எண்ணும் தருக்கினால் அதை
நண்பன் மறந்தன னென்றவா றவன்
தேனினை ஒத்த குழலிலும் பல
தீம்பிலும் வேடிக்கைப் பேச்சிலும் விரி
வானென நின்றிடும் அன்பிலும் தினம்
வாடிக்கை யாகக் கழியவே (2)
காலத்தில் கல்வி முடிந்திடக் கொடுங்
கால முடல்கள் பிரித்திட அவன்
சீலத்திற் கேற்ற வகையிலே புகழ்
சேரத்துச் சகத்தினை ஆண்டிட வருங்
கோல வறுமையிற் சிக்கியான் எனைக்
கொல்ல அதுநினை வேளையில் , சகி
பாலிக்கவே உள்ளத் தோழனைச் சென்று
பார்த்து வரவெனைத் தூண்டினள்! (3)
ஆண்டுகள் பற்பல வானபின் அந்த
அன்பின் மறுவுரு தன்னைநான் இன்று
மீண்டும் அடைந்திடும் வேளையில் உள்ள
மிடியின் கடுமையை என்சொல? எந்த
வேண்டு தலுங்கொண்ட தில்லைதான் - அருள்
வேந்த னெனினும்நான் வெற்றுக்கை உடன்
ஈண்டவ னைச்சென்று நாடிடின் என்ன
ஏற்ற மதிலென வாடினேன்! (4)
வீட்டை உருட்டி விளாவிட அங்கு
விஞ்சிய கொஞ்சம் அவலினைத் துணி
மூட்டை சிறிதெனக் கட்டியே விதி
முற்றும் அறிந்தவன் ஆண்டிடும் நல்ல
நாட்டினை நாடி நடக்கையில் கொண்ட
நாணினை எங்கணம் வார்த்தையில் இங்கு
மாட்டுவன் என்பது மோர்ந்திலேன்! அவன்
மாயைத் திறம்மிக வல்லதே! (5)
கண்ணனைக் கண்டு வருகை
இன்னுங் கனவிது காண்பனோ! இலை
யாவும் நனவெனத் தேர்வனோ! புவி
மன்னவ னென்னை எதிர்கொண்டே கட்டி
மார்புற வென்னைத் தழுவியே பல
கன்னற் பழங்கதை பேசியே என்றன்
கால்கழு வியுபசா ரங்கள் - என
என்னென்ன வோவங்குச் செய்தனன்! அவை
யாவும் நினைவினில் இல்லையால்! (6)
எத்தனை எத்தனை இன்சுவை தனை
இத்தரை இத்தரை கண்டதோ! அவை
அத்தனை அத்தனை தன்னையும் அவன்
அன்றெனக் கேவிருந் தாக்கினன்! பினர்
நித்திரை ஏகுமுன் மஞ்சத்தில் பல
நீளக் கதையுரை யாடுங்கால் ஒரு
வித்தகத் தாலவன் சட்டென என்றன்
வீணவல் மூட்டையைப் பற்றினன்! (7)
ஒற்றைப் பிடியவன் உண்டதும் அதை
ஓஹொ ஹோவென் றுவந்ததும் பின்பு
மற்றைப் பிடியொன் றெடுத்ததும் அவன்
மங்கை விழுந்து தடுத்ததும் என்றன்
சிற்றறி வுக்குளெட் டாததாம் தனி
செய்கை யதன்விவ காரத்தை தவ
முற்றவர் ஓதி வியப்பர்காண்! எது
மோர்ந்தில னேதிங் குரைப்பதே! (8)
தோழனைக் கண்ட மகிழ்வினில் அவன்
தோற்றப் பொலிவில் மயங்கியே - எந்த
ஏழைமை நீங்க விரும்பியே இவண்
ஏகின னென்பதும் விட்டனன் ! அவன்
ஆழச் செலுத்திய அன்பினில் அதன்
ஆட்டத் திலோட்டத் திலின்பினில் செல்வக்
கீழைக் கணக்குகள் நிற்குமோ! எந்தக்
கேள்வியு மின்றித் திரும்பினன்! (9)
வீடு நெருங்கிய வேளையில் அது
வேறொரு மாளிகை யாகவே! பெரும்
மாடு வழங்கியென் தோழனும் எமை
மாற்றி யருளியனன் கண்டிரோ ! எந்த
ஈடு மிலாதிந்த ஏழையை அவன்
ஏற்றுருள் செய்திட்டப் பான்மையால் சிறு
தேடலி லாமலென் நண்பனாய் திருத்
தேவை அடைந்துத் திளைக்கிறேன்! (10)